S.V.Sekar: இன்று காலை 10 மணிக்கு பாக்யராஜ் எங்கே இருக்க வேண்டியவர் தெரியுமா? எஸ்.வி.சேகர் உருக்கம்
சென்னை: எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மணிக்கு புறப்பட வேண்டியவர், இறந்துவிட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் எஸ்.வி.சேகர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்வி சேகர் மேலும் பேசுகையில், எனது நெருங்கிய நண்பர் பாக்யராஜ். கிழக்கே போகும் ரயில் படத்தில் இருந்தே அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்தியாவிலேயே திரைக்கதைக்கு மிகப் பெரிய ஆசானாக விளங்கியவர்.

இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து படம் எடுத்தவர். குடும்பத் தலைவிகளின் ஆடியன்ஸ் கொண்டவர் பாக்யராஜ்! தன்னையே படங்களில் கேலி செய்து தான் ஒரு ஹீரோ இல்லை என்பதை காட்டி பல படங்களை வெற்றி படங்களாக்கியவர்.
பல படங்கள் அவருக்கு வெள்ளி விழா கண்டிருக்கிறது. அது போல் 100 நாட்கள் ஓடியிருக்கிறது. கொங்கு மண்டலத்திற்குரிய நல்ல குணங்களையும் உபசரிக்கும் தன்மையையும் பெற்றவர்.
யார் குறித்தும் புறம் பேச மாட்டார். எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலை 10 மணிக்கு கிளம்ப வேண்டியவர். நடைபயிற்சிக்கு போய்விட்டு வந்த பிறகு இப்படி மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் நமக்கே இத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது என்றால், அவரது குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும்.
இது ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆனால் பாக்யராஜ் என்ற நடிகர் டிவி, மீடியா இருக்கும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இந்த சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறப்பதற்கு உண்டான மனோதைரியத்தை ஆண்டவன் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு எஸ்வி சேகர் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் மிகவும் பிடித்த வகையில் சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவையைத் திரைக்கதையில் மிக நாசுக்காகக் கையாள்வதில் அவர் ஒரு நிபுணர்.
எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து நலிந்த எழுத்தாளர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். கவிஞர் வாலி இவரைப் பற்றிப் பெருமையாகக் கூறிய விஷயங்களையும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் அவரது கொங்கு மண் குணத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
"இருவருடைய நடிப்பு பாணியும் ஒரே மாதிரி இருப்பதால் என் படத்தில் உங்களை நடிக்க வைக்க முடியாது, நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம்" என என்னிடம் அடிக்கடி நகைச்சுவையாக கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications