மறு ஆய்வு மனு தாக்கல்: தமிழக குழு டெல்லி பயணம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரும் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்காக உயர் மட்டக் குழு சென்னையிலிருந்து இன்று டெல்லிக்கு விரைந்தது.
பல நூற்றாண்டுளாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும், தமிழர்களின் வீர பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் ஒற்றைத் தீர்ப்பில் தடாலடியாக தடை விதித்து விட்டது.
இதனால் தமிழக மக்கள் குறிப்பாக தென் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர். காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு தடை விதித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கருணாநிதி ஆலோசனை:
தென் தமிழக கிராமங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி நேற்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால ஆணையை ரத்து செய்ய, தமிழக அரசும் மற்றவர்களும் முன் வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த செய்தி தென் மாவட்டங்களில் பெரும் ஏமாற்றத்தினனை விளைவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் இந்த வீர விளையாட்டு தடை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி இதுகுறித்து அப்பீல் செய்வற்கு, மறு ஆய்வு நடத்தப்படுவதற்கான மேல் நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டதின் பேரில், இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு இதுதொடர்பாக டெல்லிக்கு விரைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி விரைந்தது:
இந்த நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், உளவுப்பிரிவு ஐஜி ஜாபர் சேட் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற இந்த குழு நாளை உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்கிறது. இதை அவசர மனுவாக கருதி விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications