புதிய இடத்துக்கு இடம் மாறும் காங். தலைமையகம்
டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் நவீன வசதிகளுடன் புதிதாக வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம், டெல்லியில் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கட்சி அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்ற என உத்தரவிட்டது.
இதனால் தற்போது 24, அக்பர் ரோடு என்ற முகவரியில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் காங்கிரஸ் தலைமையகம், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது.
இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 8,093 சதுர அடி இடம் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் 208, ரோஸ் அவென்யூ என்ற பங்களாவை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் கட்ட இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படுகிறது. அடுத்த 1 வருடத்தில் கட்சியின் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான மோதிலால் வோரா தெரிவித்தார்.
தற்போது அந்த பங்களாவில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் ஆருயூசு வசித்து வருகிறார். அவருக்கு வேறு இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ஊரக மேம்பாட்டு துறை ஒவ்வொரு கட்சிக்கும், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் ஒதுக்க உள்ளது. இதன் மூலம் மாநிலங்களில் உள்ள பல கட்சிகள் டெல்லியில் அலுவலகம் கட்டும் வாய்ப்பை பெற்றுள்ளன.