பெட்ரோல், டீசல், காஸ் விலை உயருகிறது - 17ம் தேதி அறிவிப்பு
டெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான இறுதி முடிவு வருகிற 17ம் தேதி எடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பெருளவு உயர்ந்து விட்டதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைய கடுமையாக உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தின் அளவு பெருமளவு உயர்ந்து விடும் என்று மத்திய அரசை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாலும், இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதாலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த விரும்பினாலும் கூட அதை செயல்படுத்த முடியாமல் தவித்து வந்தது மத்திய அரசு.
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவை வருகிற 17ம் தேதி மத்திய அமைச்சரவை எடுக்கவுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை 1 ரூபாயும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டரின் விலையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 30 வரை உயரக் கூடும் எனத் தெரிகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த இடதுசாரிகளின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.