குன்னூர் அருகே அரசு பஸ்சின் டயரில் தீ பிடித்தது: பயணிகள் தப்பினர்
குன்னூர்: குன்னூர் அருகே அரசு பேருந்தில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது. ஆனால், இந்த விபத்தில் 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்றிரவு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. 9 மணி அளவில் கல்லார் என்ற இடத்தில் சென்றபோது பஸ்சின் பின்பக்கம் இருந்து புகை கிளம்பியது.
உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது பேருந்தின் டயர் தீப்பிடித்து எரிவது தெரிந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்தனர்.
பின்னர் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் உதவியுடன் அருகில் இருந்த ஓடையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீ அணைக்கப்பட்டது. தீ மேலும் பரவி டீசல் டேங்கில் பிடித்திருந்தால் பலர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.
பயணிகள் துரிதமாக செயல்பட்டதால் பேருந்தில் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாதே இதற்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.