பாஜகவுடன் சேர்ந்தால் அதிமுகவுக்கு தோல்வி நிச்சயம் - கி.வீரமணி

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை. இதை சுட்டிக்காட்டும் வகையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தை மாதத்தை தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக அறிவிக்கும் காலம் விரைவில் வரும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அந்த அறிவிப்பை ஆவலாக எதிர்பார்க்கிறோம். முதல்வர் இதை அறிவித்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழுக்கு
செம்மொழி அந்தஸ்து கிடைத்தது போல, இதுவும் வரலாற்றில் இடம்பெறும்.
சித்திரையில் தொடங்கும் தமிழ் வருடங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் வட மொழியில் உள்ளன. தை மாதம் தொடங்கும் ஆண்டுதான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு வரலாற்று சான்றுகள் இருக்கின்றன.
நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருந்து கொடுப்பது அவரது சொந்த விருப்பம். 2004ம் ஆண்டு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோல்வியை சந்தித்தது.
மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் ஏற்கனவே பெற்ற தோல்வி பாடத்தை மீண்டும் படிக்க வேண்டியது வரும்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் மத்திய அரசு முறையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் சேது சமுத்திர திட்டத்தை விட்டுக்கொடுக்க கூடாது. பாஜகவின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியக்கூடாது. இது தொடர்பான பேரவை குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவது சமூக நீதி பிரச்சனை. இது சுமூகமாக முடிக்கப்பட வேண்டும் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications