தேமுதிகவுக்கு பாஜக பகிரங்க அழைப்பு
திருச்சி: தேமுதிகவினர் எங்கள் கூட்டணியில் சேர்ந்து அத்வானியின் தலைமையை ஏற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
குஜராத் முதல்வர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ரீதியான விருந்து அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் செல்கிறார்.
மோடியின் வருகைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. அவருடைய வருகைக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும், அளிக்கும் என நம்புகிறோம். மோடி தேசிய சின்னமாக இருக்கிறார்.
மேட்டுப்பாளையத்தில் 3 இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கண்டன போராட்டம் நடத்த இருப்பவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அனைத்து அரசியல் கட்சிகளும் மதச்சார்பற்றவர் போல் காட்டிக் கொண்டாலும், கேரளாவில் மதானியின் மதவாத கட்சியுடன் தான் சேர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் தமுமுகவுடன் கூட்டணி சேர்ந்து தான் திமுகவும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தேமுதிகவுக்கு பகிரங்க அழைப்பு:
பாஜக தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திவருகிறது. தேர்தலைப் பொறுத்தவரை யாருடன் கூட்டணி என திறந்த மனதுடன் இருக்கிறோம். தேமுதிகவுக்கு பகிரங்கமாக கூட்டணியில் சேர அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் அத்வானி தலைமையை ஏற்க வேண்டும்.
எப்போது தேர்தல் வந்தாலும் மத்தியில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலப்பட்டு வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி பலவீனப்பட்டு வருகிறது. மத்தியில் 3வது அணிக்கு வாய்ப்பே இல்லை.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. தேசிய சிந்தனை உடைய கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்வது அக்கட்சிக்கு நல்லது.
ஆனால் திமுக இருக்கும் அணியில் இணைந்தால் அந்த கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்காது. ஜெயிக்கும் என தெரிந்தால் பாமக கூட பாஜக கூட்டணிக்கு வந்துவிடும் என்றார் இல.கணேசன்.