போகி: சென்னையில் பெரும் புகை மூட்டம்
சென்னை: போகி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. போகி புகை காரணமாக சென்னை நகர் முழுவதும் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் விழா போகி. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வழக்கப்படி, பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக போகி கொண்டாடப்படுகிறது.
இந்த போகி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்றே வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை சேகரித்து வைத்திருந்த மக்கள் இன்று அதிகாலை, அவற்றை வீடுகளுக்கு முன்பு தீயிட்டுக் கொளுத்தினர்.
போகியின் போது தீவைத்து எரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து வந்த புகையால் சென்னை நகர் முழுவதும் பெரும் புகை மூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே பனி வேறு நிலவியதால் இந்தப் புகையும் சேர்ந்து பெரும் புகை மண்டலமாக மாறியது சென்னை.
முன்னதாக பிளாஸ்டிக், பாலித்தீன், டயர்களை கொளுத்தக் கூடாது என சென்னை காவல்துறை எச்சரித்திருந்தது. இதேபோன்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பாதுகாப்புக்கு 5000 போலீஸார்:
இதற்கிடையே, பொங்கல் பண்டிகை இன்று தொடங்கி இந்த வார இறுதி வரை நீடிப்பதால் பாதுகாப்புப் பணிக்கு 5000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் வெகு பிரபலமான காணும் பொங்கல் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நகரில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரைப் பகுதிகளில் குதிரைப்படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பல இடங்களில் பொருத்தப்படவுள்ளன.
காணும் பொங்கலன்று கடலில் குளிக்கவும் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.