மோடியை எதிர்த்து போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வருகையைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இவற்றில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்திருந்ன. மோடி வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அவை அறிவித்திருந்தன.
இந்த நிலையில் இன்று காலை மோடி திட்டமிட்டபடி சென்னைக்கு வந்தார். இதையடுத்து மோடியின் வருகையை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வட சென்னை மாவட்ட செயலாளர் சண்முகம், எம்.எல்.ஏ மகேந்திரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடி உருவப் படத்துடன் கூடிய எலும்புக் கூடு படங்களுடன் வந்திருந்தனர். ரத்தக் கறை படிந்த கரங்களுடன் மோடி சென்னைக்கு வரக் கூடாது. அவருக்கு விருந்தளிக்கும் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்தும் கூட்டத்தினர் கோஷமிட்டனர்.
தடையை மீறி நடந்த போராட்டம் என்பதால் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரேயும் 20 பெண்கள் உள்பட 125 பேர் போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மதுரையில் அருந்ததியர் அமைப்பின் சார்பில் மோடியின் வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதேபோல கடந்த 2 நாட்களாக பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் மோடியை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றன.
மாலையில் முற்றுகை:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 12 அமைப்புகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில் இன்று மாலை காமராசர் அரங்கில் நடைபெறும் துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் மோடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால் காமராசர் அரங்கப் பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications