டாஸ்மாக்கில் மது விலை கிடு கிடு உயர்வு-ரெய்டுக்கு உத்தரவு
நாகர்கோவில்: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுவை கூடுதல் விலைக்கு விற்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 2007 டிசம்பர் 11ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களின் விலையை உயர்த்தியது. ஆனால் விற்பனையாளர்களோ அரசு விலையை ஏற்றுவதற்கு முன்னதாகவே அவர்கள் விலையை ஏற்றி விட்டனர்.
அது மட்டுமில்லாமல் கடந்த புத்தாண்டு தினத்தன்று மதுபானங்களின் விலையை தாறுமாறாக விலையை கூடுதலாக வைத்து விற்பனை செய்தனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதன் பேரில் அதிரடி சோதனை நடத்தி 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தனர்.
தற்போது பொங்கல் பண்டிகை வருவதையொட்டி கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் மீண்டும் விலையை ஏற்றி விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.
இதனால் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும் இந்த குழுவின் அதிகாரிகள், இன்னொரு மாவட்டத்துக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பேரில் மதுரை மண்டல டாஸ்மாக் மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்றதற்காக 16 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications