அரசு ஊழியர் தலை துண்டித்து கொலை
தூத்துக்குடி: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த அரசு ஊழியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையானவரின் மனைவியின் சகோதரர் உள்பட இருவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், செட்டாரகுடியை சேர்ந்தவர் ராமேஸ்வரன். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பிஆர்ஓவிடம் டிரைவராக உள்ளார். இவருக்கும் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செந்தாட்டியாபிள்ளை மகள் ராசம்மாளுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆரம்ப காலத்தில் தனது வீட்டில் மனைவி ராசம்மாளுடன் வசித்து வந்த ராமேஸ்வரன் 7 ஆண்டுகளுக்கு முன்னர் மாமனார் வீட்டில் குடியேறினார்.
குடிப் பழக்கம் உடைய ராமேஸ்வரன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.
இதனை ராசம்மாவின் அண்ணன் சுடலைமுத்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் ராமேஸ்வரன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மனைவியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டு, அடித்து உதைத்துவிட்டு வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து போதையில் தூங்கிவிட்டார்.
தனது தங்கை படும் அவலத்தை பார்த்த சுடலை முத்து தனது நண்பர் பட்டனுடன் சேர்ந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராமேஸ்வரனின் கழுத்தை அரிவாளால் வெட்டி துண்டாக்கினர். படுகொலையை செய்துவிட்டு இருவரும் தட்டம்பாறை காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.
பின்னர் துணை எஸ்.பி.நடராஜ மூர்த்தி, இன்ஸ்பெக்டர் அய்யாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராமேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.