ஜல்லிக்கட்டு: காரைக்குடியில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த முடிவு
காரைக்குடி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி பகுதியில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது.
இதனால் வழக்கமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும் முக்கிய கிராமங்கான அலங்காநல்லூர், பாலமேடு, சிராவய்ல உட்பட பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வருகிறது. கடையடைப்பு, உண்ணாவிரதம், கண்டன சுவரொட்டிகள் என போராட்டம் தொடர்ந்த வண்ணமாக உள்ளது.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட கிராமமக்கள், போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அவமதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று வற்புத்தி வருகிறார்கள்.
ஆனால் கிராம மக்களோ இதற்கெல்லாம் செவி சாய்ப்பதாகவே தெரியவில்லை. இந்நிலையில் காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் தாரேஸ் அகமது கிராம முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் ஜல்லிக்கட்டு பாரம்பரிய உரிமை. போட்டியை நிறுத்தினால் தெய்வகுற்றமாகி விடும் என்று ஆவேச குரல் எழுப்பினர். பொது மக்களின் எதிர்ப்பை கண்டு என்னசெய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் விழித்தனர்.
கறுப்புக்கொடி ஏற்றுவோம்:
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு, எங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அதிகாரிகள் சொல்வதையே கேட்கவில்லை. நீங்கள் சொல்வதை சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீருவோம் என பிடிவாதமாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொசப்பட்டி கிராமத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து காளை மாடுகளுடன் கருப்புக் கொடி ஊர்வலத்தை நடத்தினர்.