அலங்காநல்லூரில் இன்றும் கடையடைப்பு - உண்ணாவிரதம்
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் இன்றும் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூரில், அப்போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பெரும் அதிர்ச்சியும், சோகமும் நிலவுகிறது. நேற்று காலை அலங்காநல்லூரில் தொடர் உண்ணாவிரதத்தை கிராம மக்கள் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக கடையடைப்பு நடந்து வந்தது. நேற்று காலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அலங்காநல்லூர் மக்கள் தொடங்கினர். இதில் குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல அருகில் உள்ள பாலமேடு கிராமத்திலும் உண்ணாவிரதம் தொடங்கியது.
இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இரு கிராம மக்களும் கடைகளை அடைத்து வைத்து சோகத்துடன் ஜல்லிக்கட்டு குறித்துப் பேசியவண்ணம் உள்ளனர்.
20 கிராமங்களில் ஜல்லிக்கட்டு - மேலூர் அருகே பரபரப்பு
இதற்கிடையே, மேலூர் அருகே உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிரடியாக ஜல்லிக்கட்டை நடத்த தீர்மானித்துள்ளன.
இதற்காக காளை மாடுகளை தயார் செய்து வரும் அவர்கள் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டை நடத்துவோம். காளைகளை ஜல்லிக்கட்டு தினத்தன்று அவிழ்த்து விடுவோம். அதை அடக்க வீரர்கள் தயாராக உள்ளனர். முடிந்தால் போலீஸார் மாடுகளைப் பிடித்து அதை தடுத்துக் கொள்ளட்டும் என்று படு தில்லாக கூறி வருகின்றனர்.
இதனால் மேலூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications