வயலில் இறங்கி ஏர் உழுத ராமதாஸ்!
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, வேட்டியை ஏற்றிக் கட்டிக் கொண்டு, தலையில் தலப்பாக்கட்டுடன் வயலில் இறங்கி ஏர் உழுதார்.
நெம்மேலி கிராமத்தில் பாமக மற்றும் மக்கள் தொலைக்காட்சி சார்பில் உழவர் திருநாள் விழா நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராம மக்களின் உற்சாகமான வரவேற்புடன் தலைவர்கள் அனைவரும் ஊருக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வயலைப் பார்த்த டாக்டர் ராமதாஸ், ஏர் பிடித்து உழ ஆசைப்பட்டார்.
இதையடுத்து நுகத்தடியில் மாடுகள் பூட்டப்பட்டு ஏர் தயாரானது. தனது சட்டையை கழற்றிய ராமதாஸ், துண்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டார். பின்னர் வேட்டிைய ஏற்றி குறுக்காக கட்டி, டிப்பிக்கள் விவசாயியாக மாறியவர், ஏரைப் பிடித்து உழுதார். இதைப் பார்த்து கூடியிருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர்.
பின்னர் கூடியிருந்த மக்களிடையே ராமதாஸ் பேசுகையில், மாட்டுப் பொங்கல் விவசாயிகள் வாழ்வில் முக்கியமானது. விவசாயிகளுக்காக மாடுகள் உழைக்கின்றன. வயலில் நெல் பயிரிட உதவும் மாடுகளுக்கு அரிசி கிடைப்பது இல்லை. தவிட்டைத்தான் கொடுக்கிறோம்.
இப்படி விவசாயிகளுக்கு மாடுகள் தங்கள் உழைப்பைக் கொடுத்து விவசாயியை முன்னேற்றம் அடையச் செய்கின்றன.
பொங்கல் திருநாளில், எல்லாத் தமிழர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன். பொங்கல் திருநாளை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்றார்.