குடும்பத்துடன் ஸ்டாலின் கொண்டாடிய சமத்துவ பொங்கல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்துடன் கிராம மக்களுடன் சேர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ பொங்கலைக் கொண்டாடினார்.
பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கஸாக அனைவரும் கூடி கொண்டாடி வேண்டும் என முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்னை அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் கிராமத்து மக்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கலைக் கொண்டாடினர்.
இதையடுத்து வேப்பம்பட்டு கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கிடையே நடந்த கோலப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அமைச்சர் ஸ்டாலினுடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிஷ், மகன் உதயநிதி, மனைவி கிருத்திகா, பேரன் இனியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஊர் மைதானத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோலங்களைப் போட்டனர். அந்த கோலங்களுக்கு ஸ்டாலினின் மகள் செந்தாமரை மார்க் போட்டு வெற்றி பெற்ற கோலத்தை தேர்வு செய்தார். மகளுக்கு உதவியாக துர்கா ஸ்டாலினும் மார்க் போட்டார்.
பின்னர் மைதானத்தில் பொங்கல் பானைகளை வைத்து பெண்கள் பொங்கலிட்டனர். முதல் பானையில் அமைச்சர் ஸ்டாலின் நெருப்பூட்டி பொங்கலிடுவதை தொடங்கி வைத்தார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகளை ஸ்டாலின் குடும்பத்தோடு பார்த்து ரசித்தார். ஒரு பள்ளிக் கூட கட்டடத்தையும் தொடங்கி வைத்தார்.
கோலப் போட்டியை தனது பேரன் இனியனைத் தூக்கிக் கொண்டு ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தார் ஸ்டாலின். அத்தோடு நிற்காமல், தனது மகள் செந்தாமரை மார்க் போடுவதை ரசித்த அவர், அங்கிருந்த பெண்களிடம், இவர் டீச்சராக இருக்கிறார். இப்போது உங்களது கோலங்களுக்கு மார்க் போட்டு டீச்சரம்மா என்பதை நிரூபிக்கிறார் என்று வேடிக்கையாக கூறினார்.
பல பெண்கள் ஸ்டாலின் கையில் இருந்த அவரது பேரன் இனியனை கன்னத்தில் தொட்டு கொஞ்சினர். இதுதான் உங்கள் பேரனா என்றும் வாஞ்சையோடு கேட்டனர். பெருமிதத்துடன் ஆமாம் என்றார் ஸ்டாலின்.
பின்னர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகையில், எத்தனையோ பொங்கல் பண்டிகையை நான் கொண்டாடியிருந்தாலும், இது மறக்க முடியாத பொங்கலாக எனக்கு அமைந்துள்ளது. இதை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
நான் மட்டுமல்ல எனது குடும்பத்தினரும் கூட மறக்க மாட்டார்கள். இனிமேல் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு கிராமத்தில்தான் பொங்கலை கொண்டாடப் போகிறேன்.
எல்லா மதத்தினரும், சமதர்மத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடும் பண்டிகை பொங்கல் என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய பொங்கலை சமத்துவ பொங்கலாக கொண்டாட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதன்படியே இப்போது இந்த சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றார் ஸ்டாலின்.
இந்த பொங்கல் விழாவுக்கு தமிழக அரசின் மகளிர் வளர்ச்சிக் கழகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.












Click it and Unblock the Notifications