களை கட்டுகிறது பொங்கல்-பானை, கரும்பு வியாபாரம் மும்முரம்

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் கரும்பு, மண்பானைகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் வியாபாரம் படு சூடாக நடந்து வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கள் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக வீட்டை சுத்தப்படுத்தி, பழைய பொருட்களை கழித்து நடத்தப்படும் போகி இன்று நடந்தது.
இந்த நிலையில் பொங்கலுக்கான ஏற்பாடுகளில் மக்கள் படு மும்முரமாக உள்ளனர். வீடுகளில் கோலமிடுவது, பானைகள் வாங்குவது, கரும்பு உள்ளிட்டவற்றை வாங்குவது என மக்கள் பிசியாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கலை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி ராமநாதபுரம், கன்னியாகுமரி வரை பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது.
இந்த ஆண்டு கரும்புகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் சற்றே விலை அதிகமாக உள்ளது.
சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்துள்ள கரும்புகள் லாரி லாரியாக கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இறங்கியுள்ளன. இவற்றை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.
சென்னை நகர் முழுவதும் கரும்பு விற்பனை சூடாக நடந்து வருகிறது. தி.நகரில் பொங்கல் பொருட்களை வாங்க பெரும் கூட்டமாக இருப்பதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications