ஜல்லிக்கட்டை காக்க அவசரச் சட்டம்: வைகோ கோரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்க தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தென் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு, தமிழக கலாச்சாரத்தின் அடையாளம், பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் வீர விளையாட்டு.
உச்சநீதிமன்றத்தின் இந்த நியாயமற்றது. கடந்த ஆண்டே இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டிய தமிழக அரசு அதிலிருந்து தவறி விட்டது.
எனவே இந்த முறையாவது துரிதமாக செயல்பட்டு, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொங்கல் பண்டிகையின்போது தவறாமல் ஜல்லிக்கட்டை நடத்த வழி பிறக்கும்.
ஏற்கனவே காவிரி விஷயத்தில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவும் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை புறம் தள்ளின என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.