அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்துவோம்-திருமாவளவன்
மதுரை: கிராம மக்கள் அனுமதித்தால் உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜல்லிக்கட்டை நடத்தும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் சார்பாக அங்கு கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசியதாவது,
இந்த உண்ணாவிரதம் உச்சநீதிமன்றம் விதித்த தடையை அகற்றக் கோரி நடைபெறுகிறது. உலகம் முழுவதும் வாழும் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகளில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் காலப்போக்கில் காணாமல் போனாலும், எஞ்சியிருப்பது இந்த பழமையான ஜல்லிக்கட்டு தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்த பெற்றது. தமிழ் மக்கள் தவிர பிற மதத்தினரும் போற்றி பாராட்டும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி அவசியம் நடக்க வேண்டும்.
கடந்த 2 வருடங்களாக இந்த விழாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
அலங்காநல்லூர் கிராம பொதுமக்கள் அனுமதிப்பார்களேயானால், குறிப்பிட்ட நாளில் ஜல்லிக்கட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்த முன்வரும் என இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கிறேன். பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதில் கூட பாதிப்புகள் வரலாம். உயிர்ச்சேதம் ஏற்படவும் கூட வாய்ப்புள்ளது. அதற்காக அவற்றை தடை செய்கிறோமா.
இந்த உண்ணாவிரதத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டிருப்பதை பார்க்கிறபோது, எத்தனை பாதிப்பு வந்தாலும், சேதங்கள் வந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில் எங்கள் பிள்ளைகளை அனுப்புவோம் எனக் கூறத்தான் அவர்கள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என நம்புகிறோம்.
எதற்கும் அஞ்சாத ஊர், வீர விளையாட்டுக்கு முன் மாதிரியான ஊர். புறநானூற்று காலத்தில் கூறப்பட்டுள்ள பெருமையை நிலைநாட்டும் ஊர் அலங்காநல்லூர். பாரம்பரியம் பட்டுப்போகாமல் ஜல்லிக்கட்டு விழா நடத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications