பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறை
துபாய்: 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அவர்களை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட 2 இந்தியர்களுக்கு துபாயில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எஸ்.எப் (36), எப்.டி (36) என பெயரிடப்பட்டுள்ள இருவருக்கும் துபாய் நீதிமன்றம் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இருவரும் தண்டனைக் காலத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.
இந்த இருவரும் அல் ஹமிரியா என்ற இடத்தில் உள்ள ஒரு அறையில், 29 வயது இந்தோனேசியப் பெண்ணையும், 23 வயது வங்கதேச பெண்ணையும் கடந்த 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அந்த இரு பெண்களும் வீட்டுப் பணிப் பெண்களாக வேலை பார்த்து வந்தனர். ஆனால் அங்கு வேலை பிடிக்காமல் தப்பி வந்து விட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை அடித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், பின்னர் அவர்களை விற்க முயன்றதாகவும் கைதான இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.