100 வருடங்களாக பொங்கல் கொண்டாடாத கிராமம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 100 வருடங்களாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் உள்ளனர்.
நாமக்கல் அருகே உள்ளது சிங்கிலிப்பட்டி. இந்த கிராம மக்கள் தான் கடந்த 100 ஆண்டுகளாக பொங்கலை புறக்கணித்து வருகின்றனர்.
காரணம், 100 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பொது இடமான அம்மன் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக பூஜைல் வைக்கப்பட்டிருந்த பொங்கலை ஒரு நாய் சாப்பிட்டு விட்டதாம். இதனால் ஊருக்கு ஆபத்து வருமென கிராமத்தில் உள்ள முதியவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்த ஆண்டும், இதே போன்று பொங்கல் தினத்தன்று ஊரில் உள்ள ஒரு மாடு இறந்து விட்டது. இதனால் இதில் பயந்து போன கிராம மக்கள் இந்த சம்பவத்தை கெட்ட சகுனமாக கருதினர்.
மேலும், பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கொண்டாடினால் ஊருக்கும், மக்களுக்கும் ஏதாவது கெட்டது நேர்ந்து விடுமோ என அஞ்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது இல்லை என முடிவு செய்தனராம்.
இப்படியாக 100 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்னும் கூட இந்த சிறிய ஊரில் பொங்கலை யாரும் கொண்டாருவதில்லை.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான முனியப்பன் என்பவர் கூறுகையில், எனது தாத்தன், பாட்டன், காலத்தில் இருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடுவது இல்லை. காரணம், பொங்கல் பூஜையில் நாய் புகுந்ததால் அதை கெட்ட சகுனமாக எண்ணி அன்று முதல் பொங்கல் பண்டிகை வைப்பதில்லை.
மேலும் மீறி செய்தால் கிராமத்திற்கும், ஊரில் உள்ள மக்களுக்கும் கெடுதல் வரும் என அன்று குடுகுடுப்பைக்காரர் கூறினாராம். அதனால் எதுக்கு வம்பு என யாரும் அது பற்றி கவலைப்படுவதில்லை, தம்பி என்றார்.












Click it and Unblock the Notifications