பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை- 1.5 கிலோ வெள்ளி, லேப்டாப் திருட்டு
நெல்லை: பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்க் அதிபர் மகன் வீட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், லேப்-டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பாளையங்கோட்டை சாமாதனபுரம் சங்கர் காலனியை சேர்ந்த தங்கராஜ் அந்த பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் மரக்கடை வைத்துள்ளார்.
இவர் தனது குடும்பத்தாருடன் மனைவியின் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு கடந்த 8ம் தேதி சென்றுவிட்டுத் திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த லேப்-டாப் கம்ப்யூட்டர் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தன.
கார்த்திகேயன் மனைவி நகைகளை அணிந்து சென்றதால் தங்க நகைகள் தப்பிவிட்டன.
தகவல் அறிந்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயசந்திரன் போலீசாருடன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். கைரேகை நிபுணர்கள் வரைவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவுபடி துணை கமிஷனர் ஜெயசந்திரன் ஆலோசனைப்படி இன்ஸ்பெக்டர் வீரபாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.