பிப். 29ல் பட்ஜெட்: மாத சம்பளம் பெறுவோரை காப்பாரா சிதம்பரம்?

டெல்லி: மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2008-09ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி (லீப் ஆண்டு என்பதால் 29ம் தேதி) தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படக் கூடும் என்று தெரிகிறது.
இந் நிலையில், பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்கள் மீது வரியை குறைப்பது மற்றும் அதி கரிப்பது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வரும் என்று பலமாக எதிர்பார்க்கப்படுவதால் இந்த பட்ஜெட்டில் அதிக வரிச் சலுகைகள் இருக்கக் கூடும் என்றும் தெரிகிறது.
தற்போது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள் மீது 16 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டர், லேப்-டாப் போன்றவற்றுக்கு தற்போது 12 சதவீத வரிதான் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மின்னணுப் பொருட்களின் விலை குறையலாம். நவீன வசதிகள் கொண்ட கலர் செல்போன், எல்சிடி டிவிகள் ஆகியவற்றின் விலையும் கணிசமாக குறையும். அதாவது 8 முதல் 10 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போல பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை ப.சிதம்பரம் வெளியிடலாம்.
ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று ஏற்கனவே ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே விமான கட்டணங்களைக் குறைக்கும் வகையில் விமான எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் ப. சிதம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல மாத வருவாய் பிரிவினரை குஷிப்படுத்த வருமான வரிக்கான உச்சவவரம்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது. இதை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஆனால், ஒப்புக்கு ரூ. 20 அதிகரிப்பதால் பெரிய அளவில் அவர்களுக்கு பயன் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் வரி செலுத்தும் வகையில் வரி விதிப்பு முறைகளில் சீர்திருத்தம் செய்யாமல், மாத சம்பளம் வாங்குவோரிடம் இருந்து அதிக அளவில் கறப்பதே பட்ஜெட் என்றாகிவிட்டதால் இந்தப் பிரிவினர் தங்களைத் தாங்களே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
(மாத ஊதியம் பெறுவோரிடம் வரி வாங்குவது தான் ஈசியான வழி என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் வருமானத்தை மறைக்க-'திரிக்க' முடியும். ஆனால், மாத சம்பளக்காரர்களிடம் வரியை பிடித்துவிட்டுத் தான் (TDS) சம்பளமே தரப்படுகிறது.)
சிதம்பரம் நிதியமைச்சரான பின்னர் தான் ஊழியர்கள் நிறுவனங்கள் வழங்கும் சம்பளம் தவிர்த்த பிற வகையான சலுகைகளுக்கும் (புட் கூப்பன் உள்ளிட்ட சில சலுகைகள்) 'பிரிஞ்ச் பெனிபிட் டாக்ஸ்' என்ற பெயரில் வரி போடப்பட்டு ஊழியர்களுக்கு 'ஆப்பு' வைக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications