சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு-மத்திய அரசு முடிவு
டெல்லி: சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மத்திய சிறுபான்மை கமிஷனின் வருடாந்திரக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் சிவராஜ் பாட்டீல் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் சிறுபான்மை இன மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய தனி இட ஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்ற கேள்வி நிலவுகிறது. யாருக்கும் பாதகம் இல்லாமல் இதை சிறப்பான முறையில் அமல்படுத்த முடியுமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சிறுபான்மை இன மக்களுக்கு உதவ பிரதமரின் 15 அம்ச திட்டம் மற்றும் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் சிவராஜ் பாட்டீல்.
தமிழகத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க மாநில அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.
ஆனால் தனி இட ஒதுக்கீடு வழங்க பாஜக மற்றும் இடதுசாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள 88 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 4 சதவீதமே என்று சச்சார் கமிட்டி தெரிவித்துள்ளது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications