சேது சமுத்திர திட்டம்-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தின் நிலை குறித்த மத்திய அரசின் நிலையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராமர் பாலம் இடிக்க இடைக்கால தடை விதித்ததுடன் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து பதில் மனு தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் அளித்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்த நிலையில் நேற்று சேது சமுத்திர திட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று மத்திய அரசு தனது புதிய பதில் மனுவைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் புதிய மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு 15 நாள் அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் சேது சமுத்திரத் திட்டம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications