திருச்சியில் எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக-தேமுதிக அடிதடி
திருச்சி: திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாகவும், கொடிகள் கட்டுவது தொடர்பாகவும் அதிமுகவினரும் தேமுதிகவினரும் அடிதடியில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
திருச்சியில் நடந்த மாலை அணிவிப்பின்போது அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் மூண்டது.
திருச்சி நீதிமன்றம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரஞ்சோதி தலைமையில் பெரும் திரளான அதிமுகவினர் காலை 11 மணிக்கு வந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த தேமுதிகவினர், தங்களது கட்சிக் கொடிகளை சிலைக்கு அருகே கட்டியிருந்தனர்.
இதைப் பார்த்த அதிமுகவினர் கடும் கோபமடைந்தனர். தேமுதிகவினர் கட்டியிருந்த கொடிகளை கிழித்து எறிந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது.
இந் நிலையில் அங்கு வந்த போலீஸார், சொல்லாமல் கொள்ளாமல் ஊர்வலமாக வந்ததாக கூறி தேமுதிகவினரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து போகக் கூறினர்.
ஆனால் நகராத தேமுதிகவினர் மாலை போடாமல் போக மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியதால், அதிமுகவினர் போன பின்னர் மாலை போட போலீஸார் ஏற்பாடு செய்தனர்.