ஆளுநரின் உறவினர்கள் கார்கள் மீது கல்வீச்சு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆளுநர் பர்னாலாவின் உறவினர்கள் சென்ற கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசித் தாக்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநர் பர்னாலாவின் உறவினர்களான மன்மோகன் சிங், தர்பூன்சிங், தர்பாரா சிங், சர்நால் சிங், நிதான் சிங் ஆகியோர் கார்களில் ராமேஸ்வரம் வந்தனர். அவர்களுடன் விருதுநகரைச் சேர்ந்த விஜயக்கண்ணன் என்ற வக்கீலும் சென்றிருந்தார்.
ராமேஸ்வரம் போய் விட்டு பரமக்குடி வழியாக அனைவரும் விருதுநகர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பரமக்குடி ஐடிஐ அருகே சிலர் திடீரென கார்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான சந்திரசேகரன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் ஊர் திரும்பினார். இதையொட்டி நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் சாலைக்கு வந்த அவர்கள் சாலையில் சென்ற ஆளுநரின் உறவினர்கள் கார்கள் மீது கற்களை வீசித் தாக்கினர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.