மதுரையில் கழுதை ரேஸ்-யானைகளுக்கு பொங்கல்
மதுரை: ஜல்லிக்கட்டு பரபரப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் மதுரை வண்டியூர் பகுதியில் கழுதை ரேஸ் படு சுவாரஸ்யமாக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதம் விதமான கொண்டாட்டங்கள் களை கட்டியிருக்கும். இவற்றில் பிரதானமானது ஜல்லிக்கட்டு. ஆனால் நிறையப் பேருக்குத் தெரியாமல் பல வித்தியாசமான போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.
அதில் ஒன்றுதான் கழுதை ரேஸ். மதுரை வண்டியூர் பகுதியில் நடத்தப்படும் இந்த கழுதை ரேஸ் சமீப காலமாக பிரபலமாகி வருகிறது.
நேற்று மாட்டுப் பொங்கலையொட்டி கழுதை ரேஸ் நடந்தது. 20க்கும் மேற்பட்ட கழுதைகள் இதில் கலந்து கொண்டன. அண்ணா நகர் மெயின் ரோட்டில் நடந்த இந்த ரேஸில் கலந்து கொண்ட கழுதைகளின் முதுகில் பொதி ஏற்றப்பட்டது.
பின்னர் அனைத்து கழுதைகளும் விரட்டி விடப்பட்டன. கழுதைகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கூடவே ஓடினர். முதலில் வந்த கழுதைக்கு பலவிதமான பரிசுகள் தரப்பட்டன.
யானைகளுக்குப் பொங்கல்:
அதேபோல, முதுமலை சரணாலயம், டாப் ஸ்லிப் சரணாலயம் ஆகியவற்றில் யானைப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இங்குள்ள யானைகளுக்கு பொங்கல் படைக்கப்பட்டு சாப்பிட கொடுக்கப்பட்டது. பெரும் பெரும் உருண்டைகளைக பொங்கல் யானைகளுக்கு தரப்பட்டது. கூடவே வெல்லம், கரும்பு ஆகியவையும் யானைகளுக்கு வழங்கப்பட்டது.
யானைப் பொங்கலைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சரணாலயங்களுக்கு வருகை தந்திருந்தனர். ஏராளமான குழந்தைகள் யானைகள் பொங்கல் சாப்பிடுவதையும், கரும்புகளை விழுங்கியதையும் பார்த்து சந்தோஷமாக ரசித்தனர்.