'புற்றீசல்கள்'-விஜய்காந்த், சரத்குமார் மீது ஜெ மறைமுக தாக்கு
சென்னை: தற்போது சில புதிய கட்சிகள் (விஜய்காந்த், சரத்குமார் கட்சிகள்) புற்றீசல் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என கூறியுள்ளார்.
எம்ஜிஆரின் 91வது பிறந்த தின விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பக்தர்களும், அதிமுகவினரும் கொண்டாடுகின்றனர்.
ஊர்கள் தெரும், தெருக்கள் தோறும் எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர். இனிப்புகள் வழங்கியும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
எம்ஜிஆர் மறைந்து 20 ஆண்டுகளாகியும் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்தவராக இன்றும் வாழ்ந்து வருகிறார்.
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை காலம் சக்கையாக துப்பிவிடுகிறது. அவர்களது வாழ்க்கை பயணத்தையும் சுவடுகளற்ற பயணமாகவும் காலம் மாற்றி விடுகிறது. ஆனால் பிறருக்காக வாழ்ந்தவர்கள் மரித்து விடலாம்; இந்த உலகத்தை விட்டு மறைந்துவிடலாம்;
ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மனித குலத்திற்கு ஆற்றிய உயர்ந்த பங்களிப்பை போற்றும் விதமாக காலம் பத்திரமாக அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளை போற்றி பாதுகாக்கிறது. எம்ஜிஆரின் வாழ்க்கையையும் அப்படித்தான் காலம் போற்றி பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தலைவர் தான் நம் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், நம்மை வழிநடத்துகின்ற வழிகாட்டி என்று நினைக்கிற போது உங்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைப்போல எனக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
கண்ணுக்குத் தெரியாது நிலத்துக்கு அடியில் நிறைந்து கிடக்கும் நீர் கிணற்றில் நம் கண்ணுக்கு தெரிந்து தாகத்தை தணிப்பது போல, கையில் சிக்காத காற்று கண்ணுக்குத் தெரியாமல் மரத்தின் நிழலில் வீசும் குளிர் தென்றலாய் நம்மை தாலாட்டுவதைப் போல, எம்ஜிஆர் மறைந்தாலும் அவர் அன்பும், ஆசியும் நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
எம்ஜிஆர் விட்டுச்சென்ற இந்த இயக்கம் பிளவு பட்டு நின்ற போது சாணக்கியத்தனத்தோடு அவற்றை ஒன்றாக இணைத்து இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டு அதிமுகவை புதிய பொலிவுடன் நிர்மாணித்து ஒரு புதிய சகாப்தத்தை என்னால் படைக்க முடிந்தது என்பதை எம்ஜிஆர் பிறந்த நாளில் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
தற்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைகூட நிறைவேற்ற முடியாமல், இலவசங்கள் என்ற பெயரில் கேலிக்கூத்தான ஆட்சியைத்தான் கருணாநிதியால் நடத்த முடிகிறதே தவிர, ஒரு நல்லாட்சியை தமிழக மக்களுக்கு அவரால் தர முடியவில்லை.
திமுக ஆட்சியால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் தீமை தான் அதிகமாக கிடைத்து வருகிறது. திட்டங்கள் அனைத்தும் ஏற்ற அளவில் நின்றதோடு சரி, மக்களுக்கு போய் சேரவில்லை. இதனால் மக்கள் வெறுத்துப்போய் உள்ளார்கள்.
எப்போது அதிமுக ஆட்சி எனது தலைமையில் மலரும் என்று மக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளும் நம்மை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை உங்களுக்கு பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தற்போது சில புதிய கட்சிகள் புற்றீசல் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றியெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை.
எம்ஜிஆரின் 91வது பிறந்த நாள் விழாவின் போது நாம் ஒரு வீரசபதம் ஏற்போம். மக்களுக்கு தொய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றுவோம். பணியாற்றுவதிலும், தொண்டு செய்வதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஊருக்கும், உலகத்திற்கும் மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்.
எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் மலரச்செய்வோம். தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தருவோம் என்று சூளுரைப்போம். வெற்றி சரித்திரம் படைப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications