ஷார்ஜாவில் இந்திய ஆசிரியை தற்கொலை
துபாய்: துபாயில் உள்ள இந்தியன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய 25 வயதுப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மேரி திருமணமாகாதவர். துபாயில் உள்ள இந்தியன் பள்ளியில் அவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் கொடுத்திருந்த ஷார்ஜா அடுக்கமாடிக் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். புதன்கிழமை மாலை தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக அவர் மீட்கப்பட்டார்.
அந்த பள்ளியில் பணியாற்றி வந்த 6 ஆசிரியர்களுக்கு அந்த பிளாட்டில் வீடு கொடுக்கப்பட்டிருந்தது. மேரி 2 ஆசிரியைகளுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
சம்பவ நாளின்போது அவருடன் தங்கியிருந்த இருவரும் வெளியில் சென்றிருந்தனர். அந்த சமயத்தில் மேரி தூங்கிக் கொண்டிருந்தார். மற்ற இருவரும் வீடு திரும்பியபோது, அவர்களது அறையில் உள்ள டேபிளில் ஒரு கடிதம் இருந்தது. அதை மேரிதான் எழுதியுள்ளார்.
சிவப்பு இங்க்கில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று அதில் மேரி எழுதியுள்ளார். இதையடுத்து மேரி எங்கே என்று 2 பேரும் தேடிப் பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள ஸ்டோர் ரூமில் உள்ள மின் விசிறியில், மேரி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது.
போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து மேரியின் உடலை மீட்டனர்.
அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார், அதிலிருந்து சிம் காணாமல் போயிருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த சிம் எங்கே என்று தற்போது விசாரணை நடந்து வருகிறது.
சமீபகாலமாக இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது அமீரகத்தில் மட்டுமன்றி வளைகுடாவின் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications