ஷார்ஜா, துபாயில் மின்சாரம் தாக்கி 2 இந்தியர்கள் பலி
துபாய்: ஷார்ஜா, துபாயில் மின்சாரம் தாக்கி இரு இந்தியர்கள் பலியாயினர்.
கேரளாவைச் சேர்ந்தவர் அனில்குமார் (28). இவர் ஷார்ஜாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஷார்ஜா தொழிற்பேட்டை 10வது பகுதியில் அவர் டிரான்ஸ்பார்மர் ஒன்றை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் முஜீப் அல் ரஹ்மான் (43) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ரஹ்மானை மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரைக் காப்பாற்ற அனில்குமார் முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அனில் குமார் உயிரிழந்தார். படுகாயத்துடன் ரஹ்மான் மீட்கப்பட்டார்.
அதேபோல துபாயில் நடந்த மின்சார விபத்தில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கபீர் (29) என்பவர் பலியானார். இவர் தனது முகாமில் உள்ள அறையில் இருந்த இரும்புக் கம்பி மீது ஷூவை மாட்டியுள்ளார்.
அப்போது கம்பி வழியாக கசிந்த மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மழை காரணமாக சுவர் ஈரமாக இருந்துள்ளது. இதனால் சுவர் வழியாக கசிந்த மின்சாரம் கம்பி வழியாக பாய்ந்து அதை கபீர் தொட்டபோது பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.
கபீருக்கு 2 குழந்தைகள் உள்ளனராம். மனைவி, குழந்தைகள் கேரளாவில் வசிப்பதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications