பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் கேமரா செல்போன் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையின் கழிவறையில் ஒரு கேமரா செல்போன், 2 சிம்கார்டுகள், சார்ஜர் ஆகியவற்றை சிறைக் காவலர்கள் கண்டெடுத்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச் சாலைகளில் கைதிகளின் அறைகளை போலீசார் அடிக்கடி சோதனையிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான விலை உயர்ந்த செல்போன்கள், சிம் கார்டுகள், போதை பொருட்கள் ஆகியவை சிக்கின.
இந்நிலையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள உள் சிறையில் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் உள்ளதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிறை காவலர்கள் திடீரென உள்சிறை மற்றும் வெளிசிறைகளில் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது உள் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 2ம் பிளாக் அருகேயுள்ள கழிவறையில் 1 கேமிரா செல்போன், 2 சிம்கார்டு, 1 செல்போன் பேட்டரி, 1 செல்போன் சார்ஜர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து தண்டனை கைதிகளிடம் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications