பெட்ரோல் விலை உயர்வு: இ.கம்யூனிஸ்ட் போராட்ட எச்சரிக்கை
சென்னை: மத்திய அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் நாடு முழுவதும் கடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நடந்த கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பரதன் பேசுகையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தினால் நடுத்தர வர்க்க மக்களும், கீழ்த்தட்டு மக்களும் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
எனவே விலை உயர்வு முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.
குறைந்த அளவில் கூட விலையை உயர்த்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், இந்தியப் பொருளாதாராத்தை அது கடுமையாக பாதிக்கும்.
மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அல்லது நாங்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நேரிடும்.
கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலே விலை உயர்வைத் தடுக்க முடியும்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான இடதுசாரிக் கட்சிகளின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும். அதற்காக 2வது மாநில மறு சீரமைப்பு ஆணையத்தை அமைக்கத் தேவையில்லை. ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது இப்படி எந்த ஆணையமும் அமைக்கப்படவில்லை என்றார் பரதன்.












Click it and Unblock the Notifications