கோவா சிக்கல் தீர்ந்தது - அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி
டெல்லி: கோவா காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது. முதல்வர் திகம்பர் காமத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.
கோவாவில் காங்கிரஸ் அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. சமீபத்தில் இந்தக் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏக்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும் திடீரென அரசுக்கு அளித்து வரும் வாபஸை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இதனால் காமத் அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டது.
உடனடியாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. காமத் டெல்லி விரைந்தார். தனது அரசைக் கவிழ்க்க நில மாபியா கும்பல் முயற்சிப்பதாக காமத் குற்றம் சாட்டினார். பாஜக அவர்களைத் தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் டெல்லிக்கு அழைக்கப்பட்ட இரு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று முழுவதும் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு தர இரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஒப்புக் கொண்டனர்.
இதேபோல சுயேச்சை எம்.எல்.ஏ விஸ்வஜித் ராணேவும் தனது ஆதரவைத் தொடர்ந்து தருவதாக அறிவித்தார். இதன் மூலம் நான்கு நாட்களாக கோவாவில் நிலவி வந்த அரசியல் ஸ்திரத்தன்மை முடிவுக்கு வந்துள்ளது.
சமரச பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி தர காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
உடன்பாடு தொடர்பான விவரங்களை கோவா முதல்வர் காமத், கோவா திரும்பியதும் அறிவிப்பார் என்று பிரபுல் படேல் தெரிவித்தார்.