விமானக் கடத்தல் அபாயம்: விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: குடியரசு தினத்தன்று, அஸ்ஸாமின் உல்பா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா நெருங்கிக் கொண்டிருப்பதால் நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தீவிரவாதிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து விமானங்களை கடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்பா தீவிரவாதிகள் இந்த சதித் திட்டங்களை தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
விமானங்களைக் கடத்தி, நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 600 உல்பா தீவிரவாதிகளை விடுவிக்குமாறு கோர உல்பா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உல்பா தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர். ஆனால் அவர்களின் சதித் திட்டம் வெளியே தெரிந்து விட்டதால் விமானக் கடத்தலை அவர்களால் நடத்த முடியவில்லை.
குடியரசு தின விழாவன்று விமானத்தை கடத்தினால் அதன் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப முடியும் என கருத்தில் கொண்டு தீவிரவாதிகள் குடியரசு தினத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
உல்பாவின் இந்த சதித் திட்டத்தையடுத்து நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications