உசிலம்பட்டி அருகே 400 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து நடவடிக்கை எடுத்தாலும் ரேஷன் அரிசி கடத்தல் சற்றும் குறையவில்லை.
இந்நிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே லாரி மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நுகர்பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் விரைந்து சென்று உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி-தும்மக்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தினர்.
அதிகாரிகள் நிற்பதை பார்த்த லாரி டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்த போது அதில் 400 மூட்டைகள் ரேஷன் பச்சரிசி இருந்தது. இதன் மதிப்பு ரூ.2.80 லட்சமாகும்.
உசிலம்பட்டி வழியாக இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சித்தது தெரிய வந்தது. லாரியையும், கடத்த முயன்ற அரிசியையும் தமிழ்நாடு நுகர்பொருள் கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications