தைப் பூசத்திற்கு தேசிய விடுமுறை: தமிழர்களுக்கு மலேசிய பிரதமர் உறுதி

கோலாலம்பூரில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு, கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த சம்பவத்தால் மலேசிய தமிழர்களிடையே அரசு மீது பெரும் கசப்புணர்வு ஏற்பட்டது. போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஹிண்ட்ராப் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 5 பேரும், போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டபோது இந்த கசப்புணர்வு மேலும் அதிகரித்தது.
இதையடுத்து தமிழர்களிடையே ஏற்பட்ட கசப்புணர்வை சரி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மலேசிய அரசு.
அதன் ஒரு பகுதியாக, தமிழர்கள் விமரிசையாக கொண்டாடும் தைப்பூச பண்டிகையை, தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறுகையில், தைப் பூசத் திருநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை கண்டிப்பாக பரிசீலிப்பேன் என உறுதி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் படாவி.
மலேசிய வாழ் தமிழர்கள் சார்பில் ஜலான் மஸ்ஜித் இந்தியா என்ற இடத்தில் நடந்த பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டபோது இந்த உறுதியை அளித்தார் படாவி.
தற்போது மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் செலாங்கூர், பெராக், நெக்ரி செம்பிலான், ஜோஹர், பினாங்கு ஆகிய மாகாணங்களில் தைப் பூசத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அதை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தைப்பூசத் திருவிழா மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 40 நாள் விரதமிருந்து, காவடி எடுத்தும், உடலில் அலகு குத்தியும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
தமிழர்களின் தைப் பூசக் கொண்டாட்டங்களைப் பார்க்க பல்வேறு நாட்டினரும் மலேசியா, சிங்கப்பூருக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்தில் மலேசியாவில் பொதுத் தேர்தல் வருகிறது. இதனால்தான், தைப் பூசத்தை தேசிய விடுமுறையாக அறிவிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் படாவி கூறியிருக்கிறார் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications