அமெரிக்காவில் ஜார்க்கண்ட் ஆய்வு மாணவர் சுட்டுக் கொலை
ஜாம்ஷெட்பூர்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில், ஆந்திராவைச் சேர்ந்த இரு ஆய்வு மாணவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் துர்ஹாமில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வந்தார் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள கமாரியா என்ற பகுதியைச் சேர்ந்த அபிஜித் மஹதோ (29). கடந்த 2 ஆண்டுளாக இவர் ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென மஹதோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்த அபிஜித் பின்னர் கான்பூர் ஐஐடியில் பி.டெக் முடித்தார். அதன் பின்னர் ஆய்வுப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
இவரது தந்தை சீதாராம் மஹதோ ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஆவார். மஹதோவின் மரணச் செய்தி கேட்டு அவரது குடும்பம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது.
அடுத்தடுத்து 3 ஆய்வு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.