மும்பையில் ஏப். 8ல் மிஸ் அரவாணி அழகிப் போட்டி
மும்பை: இந்தியாவில் உள்ள அரவாணிகளுக்கான மிஸ் அரவாணி அழகிப் போட்டி மும்பையில் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறவுள்ளது. உலகிலேயே அரவாணிகளுக்கான அழகிப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
நாடு முழுவதிலும் உள்ள அரவாணிகளுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் அரவாணிகளுக்கு மிஸ் அரவாணி பட்டம் வழங்கப்படும்.
மிஸ் அரவாணிப் போட்டியோடு பேஷன் ஷோவும் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான அரவாணிகள் பெயர் கொடுத்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ள டெல்லியைச் சேர்ந்த சுஷில் குமார் சிங் கூறுகையில், இதுவரை 1000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் பலர் விண்ணப்பங்களை கேட்டு வருகின்றனர்.
மும்பையில் மட்டும் 20 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். முதல் நாளிலேயே 200 பேர் விண்ணப்பம் பெற்றனர்.
பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளன.
மும்பை தவிர டெல்லி, கொல்கத்தா, பாட்னா, போபால், சென்னை, பெங்களூர், கோரக்பூர் ஆகிய ஊர்களிலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இப்போட்டியில் 18 வயது முதல் 30 வயது வரையிலான அரவாணிகள் கலந்து கொள்ளலாம்.
இதுவரை விண்ணப்பம் அளித்துள்ளவர்கள் 18 முதல் 23 வயது வரையிலானவர்களாக உள்ளனர்.
இப்போடிக்கான நடுவர்களாக பணியாற்ற அரவாணிகள் சமூகத்தைச் சேர்ந்த பிரபலங்களான ஷப்னம் மாசி, காலி ஹிஜ்ரா, ஆஷா தேவி ஆகியோரை அணுகியுள்ளோம். இதுதவிர சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரபலங்களையும் நடுவர் குழுவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.