நாமக்கல் அருகே 500 கோழிகள் மர்மச் சாவு-பறவைக் காய்ச்சலா
நாமக்கல்: நாமக்கல் அருகே மர்ம நோய் தாக்கி 500 கோழிகள் பலியாகியுள்ளன. இதனால் பறவை காய்ச்சல் பீதி தமிழகத்திலும் பரவியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. தமிழகத்தில் பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந் நிலையில் நாமக்கல் மாவட்டம், வில்லிபாளையம், குச்சிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 500 கோழிகள் திடீரென உயிரிழந்தன.
குச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. கோழிகள் அடுத்தடுத்து இறந்தது குறித்து தகவல் அறிந்த கோழியின ஆய்வக உதவி இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழு குச்சிப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு இறந்த கோழிகளை புதைத்த இடத்திலிருந்து பரிசோதனைக்காக தோண்டி எடுத்தனர்.
இதே போல் அப்பகுதியின் மற்ற கிராமங்களில் இறந்த கோழிகளில் இருந்து ஆய்வுக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு போபாலில் உள்ள விலங்கின ஆய்வுக் கூடத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளை கழிச்சல் தாக்கியுள்ளது: கலெக்டர்
இறந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கவில்லை. அதற்கு வெள்ளை கழிச்சல் (ராணிகட் நோய்) நோய் தாக்கி இறந்துள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜி.சுந்தரமூர்த்தி கூறியுள்ளார்.
திருச்சியில் கறிக்கோழி, முட்டை விலைகள் வீழ்ச்சி:
பறவைக் காய்ச்சல் பீதியை தொடர்ந்து திருச்சியில் கறிக்கோழி, கோழி முட்டைகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் 1 முட்டை ரூ.2 விலைக்கு விற்கபட்டது. ஆனால் பறவைக் காய்ச்சல் பீதியை தொடர்ந்து முட்டை விலை 80 பைசா வரை குறைந்து ரூ.1.20 முதல் ரூ.1.30 வரையே விற்கப்படுகிறது.
அதே போல பிராய்லர் சிக்கனின் விலை ரூ.34லிருந்து ரூ.25 ஆகக் குறைந்துவிட்டது. விலை குறைந்தாலும் யாரும் கோழிக் கறியை வாங்க தயாரா இல்லை.
4 கோடி முட்டைகள் தேக்கம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 750க்கும் மேற்பட்ட பண்ணைகளில் வெளியூர்களுக்கு அனுப்பப்படாமல் 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இதனால் கடந்த வாரம் ரூ.2லிருந்து 0.40 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.1.60க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது மேலும் 0.40 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.1.20 ஆக நிர்ணியித்து நாமக்கல் மண்டல உள்ள தேசிய முட்டை வளர்ச்சி குழு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications