ரூ. 1596 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தமிழக அரசு ஒப்புதல்
சென்னை: ரூ. 1596.30 கோடி மதிப்பிலான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி செலவிடப்படவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறு சீரமைப்புத் திட்ட கண்காணிப்பு கூட்டத்திற்குப் பின்னர் இந்த ஒப்புதலை அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதி, குடிநீர் வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை நகரின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள நெம்மேலி கிராமத்தில் ரூ. 980.17 கோடி மதிப்பில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் இந்த குடிநீர் ஆலையை நிறுவும். இத்திட்டத்தின் கீழ் சென்னை நகருக்கு தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
மேலும், சேலம், திருச்சி, நெல்லை, மாநகராட்சிள், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி நகராட்சிகளில் ரூ. 114.15 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications