லாரி ஸ்டிரைக் வாபஸ்-பெங்களூரில் மீண்டும் டிராபிக் ஜாம்
பெங்களூர்: கர்நாடகத்தில் நடந்து வந்த லாரிகள், டாக்சிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் முடங்கியிருந்த தமிழக லாரிகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
கர்நாடக அரசு அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக டாக்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத சாப்ட்வேர் நிறுவன வாடகை வாகனங்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக இயக்கப்படும் பஸ், வேன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் சாப்ட்வேர், பிபிஓ, கால் சென்டர் நிறுவன ஊழியர்களும் பெரும் சிரத்துக்கு ஆளாயினர்.
தமிழகத்தில் இருந்து தினமும் 5,000க்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன. இந் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் பொருட்கள் முடங்கின.
இதனால் ஏற்கனவே சரக்குகளுடன் வட மாநிலங்களுக்கு கிளம்பிய தமிழக லாரிகள், பாதி வழியிலும், கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளிலும் ரோட்டோரங்களிலும் சோதனைச் சாவடிகளிலும் நிறுத்தப்பட்டன. ஓசூர் முழுவதும் வரிசையாக சரக்கு லாரிகள் ஆயிரக்கணக்கில் வரிசையாக நிறுத்தப்பட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த ஸ்டிரைக்கால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கமடைந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழகத்திற்கு தினமும் ரூ. 100 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வந்தது.
பேச்சுவார்த்தை வெற்றி:
இந்நிலையில், கர்நாடக லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் அரசு பிரதிநிதிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், புதிய வாகனங்களில் மட்டுமே வேக கட்டுப்பாடு கருவி பொருத்தினால் போதும் பழைய வாகனங்களுக்கு பொறுத்த வேண்டியதில்லை என கர்நாடக அரசு அறிவித்தது.
ஸ்டிரைக் வாபஸ்-மீண்டும் டிராபிக் ஜாம்:
இதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போராட்டம் வாபஸ் ஆனவுடன் ஆயிரக்கணக்கான லாரிகள் பெங்களூர் வழியாக வேறு மாநிலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தன. இதனால் நேற்று இரவு முதலே பெங்களூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பமாகிவிட்டது.
அதே போல சாப்ட்வேர் நிறுவன வாகனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டதால் இன்று காலை முதலே நகரின் பல பகுதிகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது.












Click it and Unblock the Notifications