எஸ்எஸ்எல்சி-முதல் 1000 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர்
சென்னை: 10ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 1000 இடங்களைப் பிடிக்கும் தமிழ் மீடியத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில்,
தமிழகத்தில் கம்ப்யூட்டர் கல்வியை கடந்த திமுக அரசு தான் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் உயர் நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். வரும் 11ம் நிதியாண்டு திட்டத்தில் 6,650 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கம்யூட்டர்கள் வழங்கப்படும்.
இளம் மாணவ, மாணவிகளிடையே கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் நன்றாக பயில ஊக்குவிக்கும் வகையிலும் எஸ்எஸ்எல்சி தேர்வில், தமிழ் வழியில் கல்வி பயின்று, அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் 1000 இடங்களைப் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
கோவையில் இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்தையும் (IIM), மதுரையில் இந்திய தொழில்நுப்டக் கழகத்தையும் (IIT), திருச்சியில் இந்திய அறிவியல் ஆய்வு மையத்தையும் (Indian Institute of Science Education and Research) அமைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் பர்னாலா.