ஜெ. பிறந்த நாள்: 60 ஜோடிகளுக்கு கல்யாணம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் அடுத்த மாதம் 24ந் தேதி 60 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் 60வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முடிவெடுக்க சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடந்தது.
ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தம்பித்துரை, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், கரூர் சின்னசாமி, சுலோச்சனா சம்பத், எடப்பாடி பழனிச்சாமி, லியாகத் அலிகான், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, நா.பாலகங்கா, ஜக்கையன், வைகை செல்வன் ஆகியோரும் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பிப்ரவரி 24ந் தேதி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 60 ஜோடிகளுக்கு ஜெயலலிதா தலைமையில் இலவச திருமணம் நடத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி மாவட்டந்தோறும் புகைப்பட கண்காட்சி நடத்துவது என்றும், சட்டமன்றத் தொகுதி வாரியாக இந்த ஆண்டு முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு பரிசுகளை வழங்குவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெ.வைப் பாதுகாக்க படை:
இதுதவிர ஜெயலலிதாவின் பாதுகாப்பிற்கு பேரவை சார்பாக தொண்டர்களைக் கொண்ட பாதுகாப்புப் படையை உருவாக்கி பாதுகாப்பு வழங்குவது என்றும், இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications