'டார்கெட்' நிர்ணயித்து போலீஸ் மாமூல் வசூல்-ஜெ குற்றச்சாட்டு
சென்னை: காவல்துறையினர் தினமும் இலக்கு நிர்ணயித்து மாமூல் வசூல் நடத்தி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களிடம் இருந்து குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 வரை வசூல் செய்ய வேண்டும் என காவலர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதாகவும், இதில் வரக்கூடிய பணம் மேலதிகாரிகளுக்கும் தரப்படுவதாகவும், இதன் மூலம் காவலர்களுக்கு 1,000 ரூபாயும், உதவி ஆய்வாளர்களுக்கு 1,500 ரூபாயும், ஆய்வாளர்களுக்கு 2,000 ரூபாயும், உதவி ஆணையர்களுக்கு அதற்கு மேலும் தினசரி வருமானம் கிடைப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இலக்கு நிர்ணயிக்கப்படுவதால், காவலர்களின் கவனம் போக்குவரத்தை சீர்செய்வதில் செல்லாமல், பணம் வசூலிப்பதிலேயே செல்கிறது என்றும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
சட்டம், ஒழுங்கு பிரிவில் காவலர்களாக் பணியாற்றும் காவலர்களின் வசூல் வேட்டை இதைவிட அதிகம். உதாரணமாக மாம்பலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.20,000 வீதமும், வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.2 லட்சம் வரையிலும், சூதாட்ட மையங்களிலிருந்து பல லட்ச ரூபாயும் வசூல் செய்வதாகவும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.
இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசோ, காவல்துறை தலைமை இயக்குனரோ இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. இவர்களின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதற்கு ஏற்ப அரசு உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டது என்பதே பொருள் என ஜெயலலிதா கூறியுள்ளார்.