உதயம் தியேட்டரை லீசுக்கு விட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்!
சென்னை: சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர்களான அருணா தியேட்டர்ஸ் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் சில பங்குதாரர்களுக்கும், கரூர் வைஸ்யா வங்கிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயம் தியேட்டர் வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த மாவு மில்லை அருணா தியேட்டர்ஸ் மற்றும் என்டர்பிரைசஸ் நிறுவனம் நிர்வகித்து வந்தது. திரையரங்க விரிவாக்கப் பணிகளுக்காக மாவு மில்லை அடமானம் வைத்து அருணா தியேட்டர்ஸ் நிர்வாகம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ. 6.5 கோடி கடன் பெற்றது.
ஆனால், கடனை திருப்பிச் செலுத்தவில்லை. மாவு மில் சரியாக ஓடாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்துவிட்டதாக உதயம் தியேட்டர் நிர்வாகம் கூறியது. இதையடுத்து கடன் தொகையையும் வட்டியையும் வசூலித்துத் தருமாறு கோரி கரூர் வைஸ்யா வங்கி, கடன் மீட்பு தீர்ப்பாணையத்தை அணுகியது.
கடன் மீட்பு தீர்ப்பாணையம், ஓய்வு பெற்ற நீதிபதி சுவாமிதுரையை கடன் மீட்பு அதிகாரியாக நியமித்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, தியேட்டர் நிர்வாக பங்குதாரர்களில் சிலர் பிரமீட் சாய்மீரா குழுமத்திடம் தியேட்டர் வளாகத்தை 25 ஆண்டு கால குத்தகைக்கு விட்டு, அதில் கிடைத்த ரூ. 13.5 கோடி பணத்தை ஒரே செட்டில்மென்ட்டாக வங்கிக்கு தர ஒப்புக் கொண்டனர்.
அதன்படி அந்த பங்குதாரர்கள் ரூ. 13.5 கோடி பணத்தை பிரமீட் சாய்மீரா நிறுவனத்திடமிருந்து பெற்று அதை கரூர் வைஸ்யா வங்கிக்கு வழங்கினர். இதையடுத்து தியேட்டர் வளாகத்தையும், மாவு மில்லையும் சாய்மீரா நிறுவனத்திடம் ஒப்படைத்து பத்திரங்களை வழங்கி ஒப்பந்தம் செய்து கொண்டது கரூர் வைஸ்யா வங்கி.
ஆனால் இந்த உடன்பாட்டுக்கு பங்குதாரர் போர்டின் ஒப்புதலை கரூர் வைஸ்யா வங்கியும், சில பங்குதாரர்களும் பெறவில்லை.
இவர்கள், இந்த உடன்பாட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், வங்கிக்கும் சாய்மீராவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், இடைக்காலத் தடையை நீக்கக் கோரியும் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் ஒப்பந்தம் செய்து கொண்ட பங்குதாரர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, இடைக்காலத் தடையை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், கரூர் வைஸ்யா வங்கிக்கும், பங்குதாரர்களில் சிலருக்கும், பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு செல்லாது என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
மேலும், வங்கியோ அல்லது உடன்பாட்டில் கையெழுத்திட்ட மற்றவர்களோ, அருணா தியேட்டர்ஸ் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் குறுக்கிடக் கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மறு உத்தரவு வரும் வரை நீதிபதி சுவாமிதுரையின் செயல்பாடுகள் தொடரலாம் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.