'எக்ஸ் ரே' முகாம் மீது தாக்குதல் நடக்கவில்லை: புலிகள்

கிளிநொச்சியில் கல்மடுகுளம் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் உள்ளது. அவ்வளவு சீக்கிரம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இந்த முகாம், அடர்ந்த காட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக இந்த முகாமுக்கு எக்ஸ்ரே தளம் என்றும் ஒரு பெயர் உண்டு.
பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து போவார். அவர் முக்கிய ஆலோசனைகள் நடத்தும் முகாம்களில் இதுவும் ஒன்று.
மிக மிக பலத்த பாதுகாப்பு தளமாக இதை விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள். இந்த முகாம் மீது நேற்று காலை 11 மணியளவில் விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கிருந்து பிரபாகரன் வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. எனவே பரபரப்பு மேலும் அதிகரித்தது.
ஆனால் இந்தத் செய்தியை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் முதன்மை முகாமை அழித்ததாக ஒரு பெரும் பரப்புரையை மக்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் அப்பட்டமான பொய்யாகும். அதில் எந்தவித உண்மையும் இல்லை.
விடுதலைப் புலிகளின் தலைமை அழிந்தது என்று முன்னர் 1989 ஆம் ஆண்டிலும், 2004 ஆம் ஆண்டும் இடம்பெற்ற சுனாமி தாக்குதலின் போதும் மக்களை குழப்பும் வகையில் பெரும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அது பொய் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
இலங்கை அரசாங்கம் இத்தகைய மலிவுப் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications