சட்டசபையில் துரைமுருகனுடன் அதிமுக கடும் வாதம்
சென்னை: தமிழக சட்ட, ஒழுங்கு நிலை, முல்லைப் பெரியாறு, பாலாறு அணைப் பிரச்சினைகள் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களுக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே இன்று சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இன்று 2வது நாள் கூட்டம் நடந்தது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
அதிமுக உறுப்பினர் பி.கே.சேகர் பாபு விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாகியுள்ளது. வெடிகுண்டுக் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது என்று ஆரம்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எழுந்து, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ படுகொலை செய்யப்பட்டார். அப்போதைய அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை இருந்ததா என்பதை உறுப்பினர் விளக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய சேகர்பாபு, பாலாற்றில் தடுப்பணை கட்ட முயலும் ஆந்திராவின் முயற்சியை தமிழக அரசு தடுக்கத் தவறி விட்டது என்றார்.
அதற்குப் பதிலளித்த துரைமுருகன், அதிமுக ஆட்சியில்தான் இந்தத் திட்டத்தை ஆந்திர அரசு தொடங்கியது என்றார்.
துரைமுருகன் புகாருக்குப் பதில் அளித்து இப்போது அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஆந்திர அரசின் முயற்சியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தேர்தல் வந்ததால், நன்னடத்தை விதிமுறைகள் குறுக்கிட்ட காரணத்தால் தொடர்ந்து நடவடிக்ைக எடுக்க முடியவில்லை.
ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக உத்தரவிட்டும் கூட அதை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிக்கவில்லை. கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தபோது அதைத் தடுக்கவும் தமிழக அரசு முயற்சிக்கவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், ஒரு மாநில அரசு நிறைவேற்றும் அவசரச் சட்டத்தை மத்திய அரசால் கூட தடுக்க முடியாது என்று விளக்கினார்.
இப்படியாக அதிமுக உறுப்பினர்களுக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.