புலிகளை ஆதரித்தால் கடும் நடவடிக்கை-காங்கிரஸ் கோரிக்கை
சென்னை: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பிரமுகர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது ஞானசேகரன் பேசியதாவது,
கடந்த 1 ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 102 விடுதலைப்புலிகள் ஊடுருவி உள்ளனர் என்றும் இதில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கியூ பிராஞ்ச் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். உளவுத்துறை விழிப்பாக இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் ஊடுருவலை தடுத்து இருக்கலாம். எனவே உளவுத்துறையை முடுக்கி விட்டு விடுதலைப் புலிகள் ஊடுருவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ராஜீவ்காந்தியை கொலை செய்து ஏராளமான தமிழர்களையும் கொன்று குவித்த விடுதலைப் புலிகளுக்கு ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பிரமுகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.
பிரபாகரன் பிடிபட்டால் இந்திய அரசிடம் ஒப்படைப்போம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளியான பிரபாகரனை இங்கு கொண்டு வர அரசு முயற்சி எடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்த உதவி செய்பவர்களை உளவுத்துறை மூலம் கண்டு பிடித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.