ஜெயச்சந்திரன் நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் வருமான வரி சோதனை
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், நகைக்கடை, பாத்திரக் கடைகளில் இன்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ளது ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக் கடை, பாத்திரக் கடை உள்ளிட்டவையும் இதே தெருவில் உள்ளன. தெற்கு உஸ்மான் சாலையிலும் இதன் கிளை நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் இன்று காலை 8 மணி முதல் அதிரடி வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதுதவிர மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயச்சந்திரன் குழும உரிமையாளரின் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையில், பெருமளவில் கணக்கில் வராத பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாக தெரிகிறது.
ஜெயச்சந்திரன் நிறுவனங்களில் நடந்த அதிரடி சோதனை தி.நகர் பகுதியில் குவிந்துள்ள பல்வேறு பிரபல நிறுவனங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் சோதனை நடக்கக் கூடும் என்று அவர்களிடையே பீதி நிலவுகிறது.