உஷார்.. சென்னையில் போலீஸ் வேடத்தில் நடமாடும் கொள்ளை கும்பல்
சென்னை: சென்னையில் போலீஸ் வேடத்தில் கார்களை மடக்கி ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. அந்தக் கும்பலை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் எழும்பூர், ஐ.சி.எப்., சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் கார்களை மடக்கி கொள்ளை சம்பவங்கள் நடந்தன. போலீஸ் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வாகனங்களை மடக்கி சோதனை செய்வது போல நடித்து காரில் இருந்தவர்களிடம் துப்பாக்கிக் காட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காரில் சென்ற பாதிரியாரான ரமேஷ்குமார் என்பவையும் மடக்கி இந்தக் கும்பல் கொள்ளையடித்தது.
அடுத்து மேலும் 4 இடங்களில் போலீஸ் உடையில் வாகன சோதனை நடத்தவது போல நடித்து 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ந்து போயுள்ள காவல்துறை இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படையை அமைத்துள்ளது.
துப்புத் துலக்குவதில் எக்ஸ்பர்ட்டான கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் இந்தப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரெளடிகளுக்கு தண்ணி காட்டும் இணை கமிஷனர் ரவி, துணை கமிஷனர் கருப்பசாமி, உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களது மேற்பார்வையில் ஒரு பெரிய டீமே வேட்டையில் இறங்கியுள்ளது.
இந்த டீமின் மின்னல் வேக விசாரணையில் கார்களை மடக்கி கொள்ளையடிக்கும் கும்பலில் உள்ள 3 பேரின் விவரமும் தெரிய வந்துள்ளது. அவர்களது பெயர் விவரம்: கோழிக்கடை கோவிந்தன், சுதா, ஜமால் ஆகியோர்.
ஆந்திராவை சேர்ந்தவனான கோவிந்தன் சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டத்தில் தாயார் மற்றும் அக்காளுடன் வசித்து வந்தவன்.
சுதா வியாசர்பாடியை சேர்ந்தவன். இவன், கோவிந்தனின் வலது கை. ஜமால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசிப்பவன்.
பழைய குற்றவாளிகளான இவர்கள் 3 பேருமே பலமுறை சிறைக்குப் போய் வந்தவர்கள். இதில் கோவிந்தன் 3 முறை குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போய் வந்தவன். ஜமாலும், சுதாவும் 2 முறை குண்டர் சட்டத்தை அனுபவித்தவர்கள்.
கடந்த 10ம் தேதி தான் மூவருமே ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தனர். அதற்குள் 8 இடங்களில் கைவரிசை காட்டிவிட்டனர்.
இந்தக் கும்பலை தேவைப்பாட்டால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவர்களை அமுக்க ஜாங்கிட் படை மும்முரமாக களமிறங்கியுள்ளது.